வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2016 (10:43 IST)

இரக்கமற்ற ஓட்டுநர் இப்போது போலிஸ் பிடியில்

இந்திய தலைநகரான டெல்லியில் சாலையில் சென்ற இளைஞரை மோதித் தள்ளிவிட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்தவரை காப்பாற்றாமல் அப்படியே விட்டு சென்ற வேன் ஓட்டுநரை போலிசார் கைது செய்துள்ளனர்.
 

 
டெல்லியில் போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலை ஒன்றில், சிறிய வேன் மோதி விபத்துக்குள்ளான நபர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உயிருக்குப் போராடி சாலையிலேயே இறந்துவிட்டார். அந்த வழியாகச் சென்றவர்கள் யாரும் அவரைக் காப்பாற்ற முன்வராததே அதற்குக் காரணம்.
 
இணையத்தில் பரவி வரும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகளில், அந்த நபரை மோதித் தள்ளிய பிறகு வேன் ஓட்டுநர் வெளியே வந்து, அடிபட்டு துடித்துக் கொண்டிருக்கும் நபரைப் பார்க்கிறார். பின்னர் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு செல்கிறார்.
 
பின்னர், அந்த வழியாக வந்த ஒருவர் இறுதியாக, அடிபட்டவரை நெருங்குகிறார். அவரைக் காப்பாற்றுவதற்கு பதிலாக, அவரிடமிருந்த கைப்பேசியை எடுத்துக் கொண்டு நடையைக் கட்டுகிறார்.
 
இந்த சம்பவம், நவீன இந்தியாவில் மனித உயிருக்கு இருக்கும் மரியாதை, மரத்துப் போன இரக்க குணம் குறித்தான விவாதத்தை தூண்டியுள்ளது.
 

 
விபத்தில் அடிப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்களை மருத்துவமனையில் சேர்க்க உதவுவோருக்கு ஊக்கப்பரிசு வழங்கும் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.
 
யார் அந்த ஓட்டுநர்?:
 
பிரபல கம்பெனி ஒன்றில் பால் விநியோகஸ்தாராக செயல்பட்ட அந்த ஓட்டுநரின் பெயர் ராஜேஷ் குமார் குப்தா (25) என்று போலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
 
அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது சட்டத்தில் உள்ள தகுந்த குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.
 
மேலும், பாதிப்புக்குள்ளான நபரின் செல்போனை திருடிச் சென்றவரை அடையாளம் காண முயற்சித்து வருவதாக கூறியுள்ளனர். விபத்தில் பலியான நபரின் பெயர் மட்டிபூல் என்று இந்தியாவில் உள்ள ஊடகங்கள் கூறியுள்ளன.
 
அவர் பகல் நேரத்தில் ரிக்ஷா தொழிலாளியாகவும், இரவில் பாதுகாப்பு பணியாளராகவும் பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளன.
 
இந்த விபத்து தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தங்களுடைய வருத்தங்களை பலர் பதிவு செய்தனர். பலரும் டெல்லியை இரக்கமற்ற நகரம் என குறிப்பிட்டுள்ளனர்.