1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 30 ஏப்ரல் 2018 (18:11 IST)

ஸ்டாலின் ப்ளான் என்ன? 3வது அணியில் காங்கிரஸுக்கு இடம் உண்டா?

தமிழகத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது திமுக. இந்நிலையில் நேற்று, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். 
 
பாஜக, காங்கிரஸ் அல்லாத 3வது தேசிய அணியை உருவாக்க  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் முயற்சித்து வருகிறார். இவருடன் இணைந்து மம்தா பானர்ஜியும் செயல்பட்டு வருகிறார். 
 
சமீபத்தில், ஸ்டாலின் மம்தா பானர்ஜியின் 3வது அணியின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின்னர், வாழ்த்து தெரிவித்தால், அந்த அணியில் இணைய போவதாக அர்த்தம் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கருணாநிதியை சந்தித்து 3வது அணிக்கு ஆதரவு கேட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகரராவ் பின்வருமாறு பேசினார்...
2004 ஆம் ஆண்டு கருணாநிதியை சந்திக்க வந்தேன். அவரது அறிவுரையையும் ஆசியையும் பெற்றேன். தற்போது நீண்ட நாட்கள் கழித்து சந்தித்தித்துள்ளேன். அவர் எனக்கு பதிலளித்தது என் அதிர்ஷ்டம். மேலும், கடந்த 70 ஆண்டுகளாக மத்தியில் உள்ள சர்வாதிகார ஆட்சியை நீக்குவதே எங்கள் நோக்கம். இதற்காக இன்னும் பல தலைவர்களை சந்தித்து ஆலோசிக்க உள்ளோம் என்று குறிப்பிட்டார்.
 
சந்திரசேகரராவ் இதற்கு முன்பாக மம்தா பானர்ஜி, தேவ கௌடா மற்றும் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரையும் சந்தித்து இது குறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
திமுக ஒருவேளை 3வது அணியில் இணைந்தால், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் டெபாசிட் வாங்குவது கூட கடினம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.