வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2018 (06:28 IST)

தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்பட்டால் என்ன நடக்கும்? சசிதரூர் கேள்விக்கு சுஷ்மா அதிர்ச்சி

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்தி மொழி பேசப்பட்டு வந்தாலும் இந்தியாவை தவிர வேறு நாடுகளில் இந்தி பேசப்படுவதில்லை. இந்த நிலையில் ஐநா அவையில் இந்தியை அலுவல் மொழியாக்க இந்தியா முயற்சி செய்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் எம்பி சசிதரூர், '22 நாடுகளில் பேசப்பட்டு வரும் உருது மொழி, ஐநாவில் அலுவல் மொழியாக இல்லை. ஒரே ஒரு நாடு பேசும் இந்தியை ஐநாவில் அலுவல் மொழியாக்க வேண்டிய அவசியம் என்ன? பிரதமர் மோடி ஐநாவில் இந்தியில் பேசினார் என்பதை பெருமையாக கூறுகின்றீர்கள். ஆனால் எதிர்காலத்தில் தமிழகத்தில் இருந்தோ அல்லது பெங்களூரில் இருந்தோ பிரதமர் தேர்வு செய்யப்பட்டால் அவர்கள் எப்படி இந்தி பேசுவார்கள்?

இந்தி மொழிக்குரிய பெருமைகளை நான் மதிக்கின்றேன். அதே நேரத்தில் இந்தி பேசாத மக்களும் இந்த நாட்டின் பெருமைக்குரியவர்கள்தான். எனவே நேரத்தையும் பணத்தையும் வீணடித்து இந்தி மொழியை ஐநா அலுவல் மொழியாக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம்' என்று சசிதரூர் பாராளுமன்றத்தில் பேசினார். இவர் ஐநாவில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சசிதரூரின் இந்த கருத்தால் சுஷ்மா ஸ்வராஜ் அதிர்ச்சியில் உறைந்து அமைதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.