1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (12:49 IST)

கனமழையால் அணை உடைந்து 6 பேர் பலி: மகாராஷ்டிராவில் துயர சம்பவம்

மகாராஷ்டிராவில் கனமழையால் அணை உடைந்து 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் 6 பேர் பலியானார்கள்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வந்ததால் பல பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் 5 நாட்களாக இரவு, பகலாக விடாமல் பெய்து வந்த மழையால், மகாராஷ்டிரா மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரியில் உள்ள திவாரே அணை வேகமாக நிரம்பி வந்த நிலையில், நேற்று இரவு திடீரென அணையின் ஒரு பகுதி உடைந்து தண்ணீர் வெளியேறியது.

தண்ணீர் வேகமாக வெளியேறிய காரணத்தால், திவாரே அணையின் அருகில் இருந்த 12 வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் இருந்தவர்களை காணவில்லை என்ற நிலையில், அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்றிருக்ககூடும் என அஞ்சப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட அதிகாரிகள், போலீஸார் மற்றும் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 6 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் மேலும் 20 பேரை காணவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் நேற்று மாலைக்கு பிறகு அணையில் விரிசல் ஏற்பட தொடங்கியதாகவும், அதன்பின்னர் அணையை ஒட்டியுள்ள 7 கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்குள் விரிசல் அதிகமாகி உடைந்து கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததாக போலீஸார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.