1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 25 ஏப்ரல் 2024 (12:32 IST)

ரயில் சக்கரங்களுக்கு நடுவே சிக்கிய சிறுவன்! 100 கி.மீ தூரம் பயணித்த சம்பவம்!

Train
உத்தர பிரதேசத்தில் சரக்கு ரயிலின் சக்கரங்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட சிறுவன் 100 கி.மீ தூரம் வரை அப்படியே பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் உள்ள ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்த சிறுவன் அஜய். சிறுவன் அஜய்யும், அவனது நண்பர்களும் அப்பகுதியில் உள்ள ரயில்வே நிலையம் அருகே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ஒளிந்து கொள்வதற்காக அங்கிருந்த சரக்கு ரயிலில் ஏறிய சிறுவன் அஜய் அங்கு சக்கரங்களுக்கு இடையே இருந்த ஒரு பகுதியில் நுழைந்துள்ளான். சிறுவன் அஜய் அதில் சிக்கிக் கொண்ட நிலையில் சரக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டுவிட்டது.

இதனால் சிறுவன் அஜய் அழுதுக்கொண்டே அந்த சரக்கு ரயிலில் சக்கரங்களுக்கு நடுவே இருந்த அமைப்பில் அமர்ந்தபடி பயணித்துள்ளான். சுமார் 100 கிலோ மீட்டர் பயணத்திற்கு பிறகு அந்த ரயில் ஹர்டோய் ரயில் நிலையத்தை அடைந்தபோது ரோந்து பணி வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் சக்கரங்களுக்கு நடுவே சிறுவன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.


உடனடியாக அதிலிருந்து சிறுவனை மீட்டு குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். அச்சிறுவனை குடும்பத்தினரிடம் அழைத்து செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிறுவன் ஒருவன் ரயில் சக்கரங்களுக்கிடையே சிக்கிய நிலையில் 100 கிலோ மீட்டர் தூரம் பயணித்த சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K