ஆயுத ஏற்றுமதி 200 கோடி டாலர்களாக அதிகரிக்க அரசு திட்டம் - மத்திய அமைச்சர்
இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியை 2 பில்லியன் டாலர்களுக்கு அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கூறியுள்ள மனோகர் பாரிக்கர், “இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியை வரும் இரண்டு ஆண்டுகளில் 200 கோடி டாலர்களுக்கு அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 33 கோடி டாலர் அளவுக்கு ஏற்றுமதி ஆகிறது.
சிலர் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுடன் ராணுவ உத்திப்பூர்வமான கூட்டு வைப்பது குறித்து விமர்சித்து வருகின்றனர். ஆனால் அப்படி கூட்டுவைப்பதன் மூலமாகவே முன்னேற்றம் காண முடியும். இது போன்ற ராணுவ உத்திப்பூர்வமான கூட்டு முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஆலோசித்து வருகிறோம்.
ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தனியாரிடமும் வெளிநாட்டு நிறுவனங்களிடமும் இது தொடர்பாக பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகிறோம். இது மிகவும் எளிதானதல்ல. ஆயுதங்களும் ராணுவத் தளவாடங்களும் ஏற்றுமதி செய்வதில் இரண்டு விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதில் ஒன்று நீங்கள் எந்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்கின்றீர்கள்; இரண்டாவது சர்வதேச ரீதியாக யாருக்கு ஆயுதங்கள் தேவையுள்ளது என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளது” என்று கூறியுள்ளார்.