1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 16 மே 2018 (13:19 IST)

காவிரி விவகாரம்; மத்திய அரசிற்கு உரிமை இல்லை - உச்சநீதிமன்றம் அதிரடி

கடந்த 14ந்தேதி காவிரி மேலாண்மை வாரியம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் ஒரு முடிவு ஏற்படும் என காத்திருந்த நிலையில் மத்திய அரசு செயல் வரைவு திட்டத்தை தாக்கல் செய்தவுடன், உச்சநீதிமன்றம் இவ்வழக்கை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. 
இந்நிலையில் காவிரி தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் தமிழக அரசின் சார்பில் 2 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது.
 
# காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்
# காவிரி மேலாண்மை வாரியம் தலைமயகத்தை கர்நாடகத்தில் அமைக்காமல் டெல்லியில் அமைக்க வேண்டும்
 
என இரு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இவ்வழக்கு தற்பொழுது விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முதல் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தற்பொழுது நிராகரித்துள்ளது.
 
மேலும் காவிரி அமைப்பிற்கு வாரியம் என்று பெயரை வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என மத்திய அரசும், கர்நாடக அரசும் தெரிவித்தது.  மேலும் வாரியத்தின் அனுமதி இல்லாமல் காவிரியில் அணை கட்ட கர்நாடகத்திற்கோ, தமிழகத்திற்கோ உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதேபோல் நீர் பங்கீடு தொடர்பான இறுதி முடிவை மத்திய அரசு தான் எடுக்கும் என மத்திய அரசின் வரைவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நீர் பங்கீடு தொடர்பான முடிவை வாரியம் தான் எடுக்கும் என்றும், இதில் மத்திய அரசு தலையிட உரிமை இல்லை என உச்சநீதிமன்றம் மத்திய அரசின் மனுவை நிராகரித்தது.
கர்நாடக அரசியலில் குழப்பம் நிலவி வருவதால், காவிரி விவகாரத்தை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்க கர்நாடக அரசு மனு அளித்தது. ஆனால் இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். இதனையடுத்து மத்திய அரசின் வரைவுத்திட்டத்தில் 3 மாற்றங்களை(அமைப்பின் பெயர், அதிகாரம், தலைமையகம்) சீர் செய்யக்கோரியதுடன், வழக்கின் மீதான விசாரணையை நாளை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.