வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (19:26 IST)

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்று வேலை: உச்ச நீதிமன்றம் தடை

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
 
தமிழகத்தில் பணியாற்றி வந்த 12,618 மக்கள் நலப்பணியாளர்கள் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டு காலத்திற்கு மேலாக தங்களுக்குப் பணி வழங்க வேண்டுமென்று அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியதோடு நீதிமன்றத்தையும் நாடினர்.
 
அவர்களது வழக்கைப் பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 12,618 மக்கள் நலப்பணியாளர்களுக்கும் மாற்றுப் பணி வழங்க வேண்டுமென்றும், இருக்கும் காலியிடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும், வயது வரம்பை கணக்கிடாமல் கல்வித் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பணி வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தது.
 
மேலும் அக்டோபர் 31க்குள் மாற்றுப் பணி வழங்காவிட்டால் பணி வழங்கப்படும் வரை அவர்கள் மக்கள் நலப்பணியாளராகப் பணி புரிந்த போது கடைசியாகப் பெற்ற ஊதியத்தை அவர்களுக்கு மாதா மாதம் வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
 
அதில், மக்கள் நலப்பணியாளர்கள் தற்காலிக ஊழியர்கள் என்பதால் அவர்களுக்கு மாற்றுப் பணி வழங்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது.
 
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.