ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 நவம்பர் 2019 (07:05 IST)

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா: முதல்வர் ஆகிறாரா ஆதித்ய தாக்கரே?

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைத்த போதிலும் இரு கட்சிகளுக்கும் தனியாக தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அரசு அமைக்க கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது
 
பாஜகவிற்கு முதல்வர் பதவியும் சிவசேனாவுக்கு துணை முதல்வர் பதவியும் என பேச்சுவார்த்தை முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் பதவியேற்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது
 
இந்நிலையில் திடீர் திருப்பமாக சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரை சந்தித்து கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளியாகியிருக்கும் செய்தி பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்ற சிவசேனாவின் கோரிக்கையை தேசியவாத காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் இதனை அடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் இணைந்து அம்மாநிலத்தின் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
சிவசேனாவின் இந்த திடீர் முடிவு பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மகாராஷ்டிராவில் எப்படியும் ஆட்சி அமைத்த தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அக்கட்சியின் தலைவர் அமித்ஷா காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் அம்மாநிலத்தில் அரசியல் பரபரப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே முதல்வர் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது