செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:37 IST)

கொரோனா பாதித்த மேனேஜர்; விடுமுறை கொடுக்காத நிர்வாகம்! – பரிதாபமாக பலியான சோகம்!

ஆந்திராவில் கொரோனா பாதிக்கப்பட்ட வங்கி மேலாளருக்கு விடுமுறை அளிக்கப்படாததால் முறையான சிகிச்சை இன்றி அவர் இறந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் உள்ள எஸ்பிஐ வங்கி ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் பிட்டா ராஜேஷ். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் தனக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவருக்கு விடுமுறை அளிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இந்நிலையில் உடல்நிலை மோசமானதால் கொரோனா சோதனை மேற்கொண்ட பிட்டா ராஜேஷுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. தனது கொரோனா பாஸிட்டிவ் சான்றிதழை உயர் அதிகாரிகளுக்கு நகல் அனுப்பி விடுமுறை கேட்டுள்ளார். பிறகு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் கொரோன பாதிப்பு அதிகமானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது இறப்புக்கு காரணம் உரிய நேரத்தில் விடுப்பு வழங்காத வங்கி மேலதிகாரிகளே என கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிட்டா ராஜேஷ் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.