1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : ஞாயிறு, 30 ஜூலை 2017 (15:06 IST)

தொடரும் ரூபாவின் அதிரடி: கோர்ட்டில் நேரில் சென்று வாதாட இருக்கிறார்!

தொடரும் ரூபாவின் அதிரடி: கோர்ட்டில் நேரில் சென்று வாதாட இருக்கிறார்!

சசிகலா விவகாரத்தில் பல அதிரடி தகவல்களை வெளியுலகத்துக்கு கொண்டுவந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா மீது கர்நாடக டிஜிபியாக இருந்த சத்தியநாராயன ராவ் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக கோர்ட்டில் நானே நேரடியாக சென்று வாதாடுவேன் ரூபா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 
முன்னதாக, சசிகலாவிற்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்ட விவகாரத்தில், தான் தனது கடமையே செய்ததாகவும், யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியாது எனவும் டிஐஜி ரூபா கருத்து தெரிவித்திருந்தார்.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த 14-ஆம் தேதி பரபரப்பு புகார் அளித்தார்.
 
இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, அவர்கள் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.  அதேசமயம், ரூபா மற்றும் டிஜிபி சத்யநாராயணாவையும் வேறு பணிக்கு மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு. மேலும் சிறைத்துறை அதிகாரிகள் சிலரும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ஆதாரமில்லாத குற்றச்சாட்டை கூறி தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, டிஜிபி சத்யநாராயணா ரூபாவிற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், தன் மீது குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் ரூ.50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்வேன் எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ரூபா சிறையில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க டிஜிபி சத்ய நாராயணாராவுக்கு அறிக்கை அனுப்பினேன். ஆனால் அவர் அறிக்கை கிடைத்ததும் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் எனக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
 
அவர் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அவர் தொடுக்கும் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தகுந்த பதில் அளிப்பேன். நானே நேரடியாக சென்று வாதாடுவேன். விசாரணையின் முடிவில், உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்றார்.