1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (19:13 IST)

நடிகையாக்குவதாகக் கூறி இளம்பெண்ணை அடைத்து வை‌த்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர்

நடிகை ஆசை காட்டி இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
 
மைசூரில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
 
மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகா பிளிகெரே கிராமத்தை சேர்ந்தவர் சுனில்(வயது 28). இவர் மைசூர் டவுன் விஜயபுரா பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருடன் உடுப்பி மாவட்டம் பிரம்மாவர் பகுதியை சேர்ந்த சமீர் (30) என்பவர் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுனிலின் வீட்டுக்கு பலர் வந்து சென்றனர்.
 
மேலும் வீட்டுக்குள் இருந்து அடிக்கடி பெண்ணின் சத்தமும் வந்ததால், சுனில் தனது வீட்டில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவதாக அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள், விஜயநகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் அந்த வீட்டுக்கு விரைந்து வந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சுனில் இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடத்துவது தெரியவந்தது.
 
இதைத்தொடர்ந்து சுனிலை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சீதா (வயது 19, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண்ணை மீட்டனர். பின்னர் அந்த பெண் மைசூர் கே.ஆர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

கைதான சுனில் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு பரபரப்பான தகவல்கள் இடம்பெற்று உள்ளன. அதுபற்றி காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:–
 
உடுப்பி மாவட்டம் பிரம்மாவரை சேர்ந்த சமீர், மஞ்சுளாவிடம், சினிமா அல்லது சின்னத்திரை நடிகை ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் அவரது பெற்றோரிடம் சென்று ஒரு கணிசமான தொகையை கொடுத்து, ‘எனக்கு பெங்களூரில் பல தயாரிப்பாளர்களை தெரியும். அதன்மூலம் உங்கள் மகளை பெரிய நடிகையாக்கி விடுகிறேன்’ என்று கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய, மஞ்சுளாவின் பெற்றோர், கடந்த ஜூன் 30 ஆம் தேதி மஞ்சுளாவை சமீருடன் பெங்களூருக்கு அனுப்பி வைத்தனர்.
 
பின்னர் சமீர், அந்த பெண்ணை பெங்களூருக்கு அழைத்து வந்து, ஒரு வாடகை வீட்டில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். மேலும் மஞ்சுளாவை தமிழகம், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு அழைத்து சென்றும் விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார்.
 
இந்த நிலையில் சமீர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மைசூரை சேர்ந்த தனது நண்பர் சுனில் என்பவரிடம் மஞ்சுளாவை ரூ.8 ஆயிரத்து விற்பனை செய்து உள்ளார். இதையடுத்து சுனில், மஞ்சுளாவை மைசூருக்கு அழைத்து வந்து விஜயபுரத்தில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது.
 
இதுதொடர்பாக, சமீர், சுனில் ஆகியோர் மீது ஆள் கடத்தல், கற்பழிப்பு, விபசாரத்தில் ஈடுபடுத்துதல், வீட்டில் சிறைவைத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் விஜயநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சமீரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.