1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (19:09 IST)

ஹேப்பி பர்த்டே சிதம்பரம்!!: வாழ்த்து சொன்ன மோடி – கடுப்பான காங்கிரஸ்!

பிரதமர் மோடி அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து கடிதத்தை கண்டு செம கடுப்பில் உள்ளார்களாம் காங்கிரஸ் கட்சியினர்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் முக்கிய உறுப்பினருமான ப.சிதம்பரம். அவர் கைது செய்யப்பட்டது பாஜகவின் தனிப்பட்ட விரோதத்தினால்தான் என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி ப.சிதம்பரத்தின் பிறந்தநாளாகும். அவர் சிறையில் இருந்ததால் காங்கிரஸார் அவரது பிறந்தநாளை பெருவாரியாக கொண்டாடவில்லை. புதுக்கோட்டை பகுதிகளில் மட்டும் அவர் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் பிரதமர் அலுவலகத்திலிருந்து ப.சிதம்பரத்தின் காரைக்குடி வீட்டு முகவரிக்கு கடிதம் வந்திருந்தது.

அதில் ப.சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த மடல் இருந்தது. இந்த விஷயம் தெரிந்த ப.சிதம்பரம் செம அப்செட். இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அந்த புகைப்படத்தை ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு “வாழ்த்து தெரிவித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் அடுத்த பதிவில் “பிரதமர் மோடியின் வாழ்த்துப்படி மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்வதே என் விருப்பம்.. துரதிர்ஷ்டவசமாக, திரு. மோடி அரசின் விசாரணைத் துறைகள் தடையாக இருக்கின்றனவே?” என்று கூறியுள்ளார்.

அந்த கடிதத்தில் ”இன்றுபோல என்றும் மக்களுக்கு சேவை செய்ய இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கண்ட காங்கிரஸார் சிலர் “கிண்டல் செய்யவேண்டுமென்றே கடிதம் அனுப்பியுள்ளார்களா?” என கொந்தளித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதற்கு யாரும் பெரிய அளவில் எதிர்ப்புகளை தெரிவிக்க தேவையில்லை என மேலிடத்தில் சொல்லப்பட்டுள்ளதால் அமைதி காக்கிறார்களாம்!