வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 2 ஜூன் 2018 (15:01 IST)

விசாரணை படம் போல் சிறுமியை கொடுமைப்படுத்தி போலீஸார் அட்டூழியம்

செய்யாத குற்றத்தை ஒத்துக்கொள்ளும்படி சிறுமியை போலீஸார் கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் வெற்றிமாறனின் விசாரணை திரைப்படத்தில், போலீஸ்காரர்கள் அப்பாவி இளைஞர்களை செய்யாத குற்றத்திற்கு பழி ஏற்கும் படி அவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்திறது போல் ஒரு சம்பவம் நொய்டாவில் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டா பகுதியில் ஷியாம் என்பவரது வீட்டில் லட்சுமி பாய்(14) என்ற  சிறுமி வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில் அந்த சிறுமி  வீட்டிலிருந்த நகைகளை திருடி விட்டதாக வீட்டின் உரிமையாளர்  காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
 
இதனையடுத்து லட்சுமியை கைது செய்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர். சிறுமி நான் திருடவில்லை என கூறிய போதும் அதனை ஏற்க மறுத்த போலீஸார், குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி சிறுமியை கொடூரமாக தாக்கியும், சிறுமியின் மீது எலக்ட்ரிக் ஷாக் வைத்தும், கைகளில் சிகரெட் சூடு வைத்தும் கொடுமை படுத்தியுள்ளனர்.
 
தன்னார்வலர் ஒருவர் இந்த விஷயத்தில் தலையிடவே, சிறுமி விடுவிக்கப்பட்டார். சிறுமியை கொடுமையாக தாக்கிய போலீஸ்காரர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரப் பிரதேச டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.