1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (10:33 IST)

பாகிஸ்தான் ஒரு பொறுப்பில்லாத அண்டைநாடு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

காஷ்மீரில் சமீபத்தில் 370ஆவது சிறப்பு பிரிவு நீக்கப்பட்டு அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது 
 
 
இந்த நிலையில் ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் தமிழருமான ஜெய்சங்கர் பாகிஸ்தான் ஒரு பொறுப்பில்லாத அண்டை நாடாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர் 'பாகிஸ்தான் நாட்டுடன் இயல்பான உறவை வைத்துக் கொள்ள இந்தியா தொடர்ந்து போராடி வருவதாகவும் ஆப்கானிஸ்தான் நாட்டுடன் வர்த்தகம் புரிவதற்கு பாகிஸ்தான் தடையாக இருப்பதாகவும் கூறினார். உலகில் வேறு எங்கும் அண்டை நாட்டின் மீது ஒரு நாடு தீவிரவாதத்தை ஏவுவதை நீங்கள் பார்க்க முடியாது என்றும் ஆனால் பாகிஸ்தான் அண்டை நாடுகளிடம் தீவிரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது என்றும், பொறுப்பில்லாத அண்டை நாடாக அந்நாடு இருப்பது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
 
முன்னதாக ரஷ்ய நாட்டின் அமைச்சர்  செர்கய் லாவ்ரோவ் அவர்களுடன் காஷ்மீர் விவகாரம் குறித்தும், பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள ரஷ்ய தூதர் நிக்கோலஸ் அவர்கள் காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த போது 'காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம் என்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அனைத்து பிரச்சினைகளையும் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்' என்றும் கருத்து தெரிவித்துள்ளார்