1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2016 (01:23 IST)

பழைய ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் அவசர சட்டம் வாபஸ்!

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு நான்காண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது.


 

கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில், நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, கடந்த நவம்பர் 8-ஆம்தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்று அறிவித்தது.

பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றி புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

அவ்வாறு மாற்றிக் கொள்ளாவிட்டால், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை ரிசர்வ் வங்கிகளுக்கு சென்றால்தான் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் வைத்திருப்பவர்களுக்கு, அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த புதிய சட்டத்தின்படி, ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், 10 தாள்களுக்கு மேல் பழைய 500, 1000 வைத்திருந்தால் சராசரியாக ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை அபராதமாக விதிக்கப்படலாம்.

ஒருவரிடமிருந்து பழைய ரூபாய் நோட்டுகள் எந்த அளவுக்கு பிடிபடுகிறதோ, அதைப்போல 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும். மிக அதிகமான தொகையை வைத்து இருப்பவர்களுக்கு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வாங்க குடியரசு தலைவருக்கு அனுப்புவதற்கு முன் பழைய 500,1000 நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை இல்லை என்று அவசரமாக திருத்தம் செய்து பழைய அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்று கொண்டுள்ளது.