1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (07:31 IST)

புளூவேல் விளையாட்டால் மேலும் ஒரு விபரீதம்: விரலை அறுத்து கொண்ட பள்ளி மாணவி

புளூவேல் என்ற ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்களின் தற்கொலை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதுவரை சுமார் 1500 பேர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் இந்த விளையாட்டு மிக வேகமாக பரவி வருகிறது.



 
 
இந்த விளையாட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் மரணத்தின் எல்லை வரை செல்லும் கொடூரமானது. ஏற்கனவே சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் சமீபத்தில் மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் தற்போது பள்ளி மாணவி ஒருவர் இந்த விளையாட்டால் தனது கை விரலை அறுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
 
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி ராஜனநகர் பகுதியை சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி ஒருவர் புளூவேல் விளையாட்டின் கட்டளையை நிறைவேற்றும் வகையை பிளேடால் கைவிரலை அறுத்து கொண்டார். ரத்தம் கொட்டிய நிலையிலும் தொடர்ந்து விளையாட்டை விளையாடி கொண்டிருந்த பள்ளி சிறுமியை அவரது பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விளையாட்டின் விபரீதம் அதிகமாகிக்கொண்டே வருவதால் உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இந்த விளையாட்டை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.