வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 5 மே 2017 (14:41 IST)

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி ; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நிர்பயா கொலை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளுக்கும், மரண தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


 

 
கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவு நிர்பயா என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட, மருத்துவ மாணவி நிர்பயா தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார். 
 
மேலும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்டார். அவருடன் சென்ற அவரது நண்பரும் தாக்கப்பட்டு உதவிக்காக மன்றாடி 45 நிமிடங்களுக்கு பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீவிர சிகிச்சை மேற்கொண்ட அப்பெண் 10 நாட்கள் டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்தார். பின்னர், சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பெண் 3 நாட்களில் பரிதாபமாக பலியானார். 
 
இந்த வழக்கில் காவல் துறையால் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் திகார் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டார். மற்றொருவருக்கு 17 வயது என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.  மீதமுள்ள முகேஷ், வினய் ஷர்மா, பவன் மற்றும் அக்ஷய் தாகுர் ஆகிய நால்வருக்கும் விரைவு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதில், 17 வயது உடையவர் மட்டும் தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலை ஆகிவிட்டார். மாற்ற 4 பேரும் சிறையில் உள்ளனர்.
 
அந்நிலையில், மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என அந்த 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவின் மீதான வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், குற்றவாளிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்து, அவர்களுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்துள்ளனர். 
 
நிர்பயாவை கொடூரமாக கற்பழித்து, கொலை செய்த அவர்களுக்கு கருணை காட்ட எந்த முகாந்திரமும் இல்லை என தீர்ப்பின் போது   உச்சநீதிமன்ற நீதிபதிகள்  கருத்து தெரிவித்தனர்.
 
இனிமேல் அந்த 4 பேரும் ஜனாதிபதியிடம் மட்டுமே கருணை மனு அனுப்ப முடியும். ஜனாதிபதியும் அதை நிராகரித்து விட்டால், அவர்களுக்கு தூக்கு தண்டன்னை நிறைவேற்றப்படும் என்பது உறுதியாகியுள்ளது.