1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2016 (11:19 IST)

என்.டி.டி.வி. ஒளிபரப்புக்கு விதித்த தடையை தானாக நீக்கிய மோடி அரசு

என்.டி.டி.வி.யின் ஹிந்தி சேனல் ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்டிருந்த ஒருநாள் தடையை நிறுத்தி வைப்பதாக மோடி தலைமையிலான மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது.
 

 
பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படைத் தளத்திற்குள் கடந்த ஜனவரி 2ஆம் தேதி திடீரென பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். எனினும் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 6 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
இந்த தாக்குதல் சம்பவத்தின்போது, சென்சிட்டிவான சில விவகாரங்களை ‘என்.டி.டி.வி இந்தியா’ ஹிந்தி சேனல் ஒளிபரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கெனவே மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின்போது டிவி சேனல் ஒளிபரப்புதான் அதிக உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், என்டிடிவி-யின் செய்தி ஒளிபரப்பு கேள்விக்கு உள்ளானது. இதுதொடர்பாக விசாரித்த மத்திய அமைச்சரகங்களுக்கு இடையேயான கமிட்டி, குற்றச்சாட்டில் உண்மையிருப்பதாக கமிட்டி கருதியது.
 
எனவே, ‘என்.டி.டி.வி இந்தியா’ ஹிந்தி சேனலை 24 மணிநேரம் முடக்க அது பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, நவம்பர் 9ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் மறுநாள் பிற்பகல் 1 மணிவரை என்.டி.டி.வி இந்தியா’ ஹிந்தி சேனலை ஒளிபரப்பத் தடை விதித்து உத்தரவிட்டது.
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துவது போன்று மோடி அரசின் நடவடிக்கை இருப்பதாக குற்றம் சாட்டியது.
 
என்.டி.டி.வி. நிறுவனமும், திங்களன்று உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசின் தடையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசு அரசியல் சாசனத்துக்கு விரோதமாக, என்.டி.டி.வி. இந்தியா சேனலுக்கு தடை விதித்திருப்பதாகவும் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தது.
 
இந்நிலையில், மத்திய அரசின் தடை நடவடிக்கைக்கு எதிராக, ‘என்.டி.டி.வி. இந்தியா’ செய்தித் தொலைக்காட்சி நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் திங்களன்று மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், மத்திய அரசு தானாகவே தடையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.