வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (12:19 IST)

உலக நாடுகளை அச்சுறுத்தும் Mpox வைரஸ்! இந்தியா விமான நிலையங்களில் எச்சரிக்கை ஏற்பாடு!

Flight

உலக நாடுகள் முழுவதும் Mpox எனப்படும் குரங்கம்மை தொற்று வேகமாக பரவி வருவதால் இந்திய விமான நிலையங்கள், எல்லைகளில் எச்சரிக்கையோடு கண்காணிக்க மத்திய அரசு எச்சரித்துள்ளது.

 

 

ஆப்பிரிக்க கண்டத்தில் ஏற்பட்ட குரங்கம்மை தொற்று காரணமாக இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அதை தொடர்ந்து இந்த குரங்கம்மை தொற்று ஆப்பிரிக்கா தாண்டியும் பல நாடுகளில் கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்தில் ஸ்பெயின், பாகிஸ்தான் நாடுகளிலும் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் குரங்கம்மை தொற்று தொடர்பான முன் ஜாக்கிரதை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 

 

விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைகளை விழிப்புடன் கண்காணிக்க அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் சப்தர்ஜங் மருத்துவமனை, ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை, லேடி ஹார்டிங்கே மருத்துவமனை ஆகியவற்றில் குரங்கம்மையால் பாதிக்கப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

இதுவரை இந்தியாவில் குரங்கம்மை பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படாவிட்டாலும் முன் ஜாக்கிரதையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K