1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஜூலை 2019 (16:41 IST)

காட்டுக்குள் நூலகம் அமைத்த தனிநபர் – மன் கீ பாத்தில் மோடி பெருமிதம்

கேரள-தமிழக எல்லையில் உள்ள மலைக்காட்டு பகுதியில் பழங்குடியினருக்காக நூலகம் அமைத்த ஒரு டீக்கடைக்காரரை பற்றி பிரதமர் மோடி தனது “மன் கீ பாத்” நிகழ்ச்சியில் பேசியதால், அவர் இப்போது புகழ் பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி மாதம்தோறும் மக்களோடு உரையாடும் “மன் கீ பாத் (மனதின் குரல்)” நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பானது. அதில் மோடி பேசும்போது “கேரளாவின் இடுக்கி அருகே உள்ள அடர்ந்த காட்டிற்குள் இருக்கும் கிராமத்தில் தனிமனிதர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் மலைவாழ் மக்களுக்காக நூலகம் ஏற்படுத்திய செய்தியை கேட்டு நான் வியந்தேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அங்கு போய் வருவேன். சின்ன டீக்கடை வைத்திருக்கும் சின்னத்தம்பி என்பவர் சுமார் 22 கிமீ புத்தகங்களை சுமந்து சென்று அந்த நூலகத்தை அமைத்திருக்கிறார்.” என மிகவும் நெகிழ்ந்து பேசினார்.

இடுக்கி அருகே தமிழக – கேரள எல்லையில் உள்ள சிறு கிராமம் எடமாலக்குடி. மலைமீது அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதே சவாலான விஷயம். எடமாலக்குடி செல்ல வேண்டுமென்றால் மூணாறில் இருந்து பேட்டிமுடி என்ற பகுதிக்கு 22கி.மீ வண்டியில் பயணித்து, அங்கிருந்து 18 கி.மீ நடந்து எடமாலக்குடிக்கு ஏற வேண்டும்.
எடமாலக்குடியில் டீக்கடை வைத்திருப்பவர் சின்னத்தம்பி. அதே கிராமத்தில் ஆசிரியராக பணி புரிபவர் முரளிதரன். சின்னத்தம்பிக்கு புத்தகங்கள், செய்தித்தாள்கள் படிப்பது, அதுகுறித்து பேசுவது என்றால் மிகவும் பிடிக்கும். முரளிதரனுடன் ஒருநாள் இப்படி பேசிக்கொண்டிருக்க, இருவரும் இணைந்து இந்த பகுதியில் ஒரு நூலகம் அமைக்கலாம் என்ற திட்டம் தோன்றியது. ஆனால் நூலகம் அமைக்கும் அளவுக்கு இருவருக்குமே வசதி இல்லை.

தனது டீக்கடையின் ஒரு பகுதியை ஒதுக்கி அதில் தார்பாயை விரித்து அதில் தான் வைத்திருந்த சில புத்தகங்களை வைத்தார். முரளிதரனும் தன்னிடம் இருந்த புத்தகங்களை வைத்தார். ஒவ்வொரு முறையும் கடைக்கு தேவையான பொருட்கள் வாங்க மலையிலிருந்து கீழே செல்லும் சின்னத்தம்பி புத்தகங்களையும் சேர்த்து வாங்கி வருவார். நாளாக நாளாக பொருட்களின் சுமையை விட புத்தகங்களின் சுமையே அதிகமானது.

இப்படியாக இவர்கள் நூலகம் அமைப்பதை முரளிதரன் அவருக்கு தெரிந்தவர்களிடம் கூற இடுக்கியில் இருக்கும் சில நண்பர்கள் புத்தகங்கள் வாங்கி கொடுத்து அவர்களை ஊக்குவித்தனர். 150 புத்தகங்களுடன் ஆரம்பித்த நூலகம் 1000 புத்தகங்கள் ஆனது. இதனால் அங்குள்ள மலைவாழ் மக்கள், குழந்தைகள் அனைவரும் கல்வியும், அறிவும் பெற்றனர். புத்தகங்களை டீ கடையிலேயே வைத்து பராமரிக்க முடியாது என்பதால் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசி புத்தகங்களை பள்ளியில் வைக்க ஏற்பாடு செய்தார் முரளிதரன்.

இந்த சம்பவத்தை மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய மோடி “சின்னத்தம்பியால் இன்று ஒரு கிராமமே கல்வியறிவு பெற்றிருக்கிறது. இந்தியாவின் சிறந்த குடிமகனாகவே நான் சின்னத்தம்பியை பார்க்கிறேன். அந்த கிராமத்திற்கு நல்லதொரு நூலகம் அமைத்து தர என்னால் முடிந்தவற்றை செய்வேன்“ என பேசியுள்ளார்.

இதுபற்றி பேசிய சின்னத்தம்பி “பிரதமர் அவர்களின் கவனத்திற்கு எங்களது உழைப்பு சென்றது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது பேச்சுக்கு பிறகு நிறைய பேர் ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.