1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (18:43 IST)

கடிதம் எழுதி வைத்து விட்டு மருத்துவக் கல்லூரி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை

எனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. செல்போனுக்கு தினம் தினம் ஆபாச எஸ்.எம்.எஸ் வருகின்றன என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
கர்நாடக மாநிலம் சித்ர துர்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சுவாதி (22) எனபவர், மைசூரு பன்னிமண்டபாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருந்து கையாளுநர் பிரிவில் 3ஆம் ஆண்டு பயின்று வருகிறார். மேலும், அந்த கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் சுவாதி தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த சகமாணவிகள், சுவாதி தங்கியிருந்த அறையின் கதவை தட்டிப் பார்த்துள்ளனர்.
 
இருப்பினும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது சுவாதி தனது அறையின் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனைக் கண்டு பார்த்து அதிர்ச்சி சக மாணவிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தூக்கில் தொங்கிய சுவாதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் சுவாதி எழுதிவைத்திருந்த உருக்கமான கடிதத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
 
அந்த கடிதத்தில், “எனக்கு நகர வாழ்க்கை பிடிக்கவில்லை. இந்த கல்லூரியிலும் படிக்கும் மாணவ, மாணவிகளுடன் என்னால் அனுசரித்து செல்ல முடியவில்லை. எனது செல்போனுக்கு தினமும் புதிய புதிய செல்போன் எண்களில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ். வருகின்றன.
 
இதனால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்து கொள்கிறேன். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி மற்றும் தோழிகள் அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள். எனது முடிவு மூலம் உங்களுக்கு பெரிய துயரத்தை கொடுத்துவிட்டு செல்கிறேன்” என்று கூறியுள்ளார்.