1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 3 ஜூன் 2019 (16:41 IST)

முதலமைச்சரை பேட்டி எடுக்கும்போது மூக்கை பொத்திய ரிப்போர்ட்டரால் சர்ச்சை

ஜார்கண்ட் மாநில முதல்வரை பேட்டி எடுத்த பிரபல செய்தி சேனலை சேர்ந்த ரிப்போர்ட்டர் ஒருவர் மூக்கை பொத்தி கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல செய்தி தொலைக்காட்சியில் ரிப்போர்ட்டராக பணிபுரிபவர் நிதிஸ்ரீ. இவர் கடந்தமாதம் ஜார்கண்ட் மாநில முதல்வர் ரகுவர தாஸை பேட்டி எடுத்தார். அப்போது முதல்வர் பதில் சொல்லும்போது அவர் மூக்கை மூடிக்கொண்டிருப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக்கு உள்ளானது.

இந்நிலையில் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜார்கண்ட் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் அபிஜித் ராஜ் ‘முதல்வர் மது அருந்தியிருப்பதாகவும், அதன் வாடை தாங்காமல் அந்த பெண் மூக்கை மூடிக் கொண்டதாகவும்’ நக்கல் செய்திருக்கிறார்.

முதல்வரை அவமரியாதையாக பேசியதற்காக அவரை மே 29 அன்று ஜார்கண்ட் போலீஸார் கைது செய்து மறுநாளே விடுவித்தனர். பிறகு அவரும் அந்த ட்வீட்டை நீக்கி விட்டார். ஆனாலும் அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்ததை பலரும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஷேர் செய்து வந்தனர்.

இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ரிப்போர்ட்டர் நிதிஸ்ரீ சமீபத்தில் ஒரு ட்விட்டர் பதிவிட்டிருந்தார். அதில் அவர் “பேட்டியின்போது நான் எதேச்சையாக மூக்கை சொறிந்தபோது அதை யாரோ போட்டோ எடுத்துவிட்டார்கள். அதை நான் ஏதோ கெட்ட வாடை அடிப்பதால் மூக்கை பொத்தியுள்ளதாக கற்பனையாக பதிவிட்டு வருகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.