வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (09:06 IST)

மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் மீது பாலியல் பலாத்கார வழக்கு

தன்னைத் திருமணம் செய்துவிட்டு, தற்போது வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்திருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் மீது கன்னட நடிகை மைத்திரி குற்றஞ் சாற்றியுள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா. இவருக்கும், குடகு மாவட்டம் சோமவார்பேட்டை, குஷால் நகரை சேர்ந்த நானய்யா என்பவரின் மகள் சுவாதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது நடந்துமுடிந்த சில மணிநேரத்தில் கன்னட நடிகை மைத்திரி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “நானும், கார்த்திக்கும் முதலில் நண்பர்களாக பழகி வந்தோம். பின்னர் காதலர்களாக மாறினோம். கடந்த ஜூன் 5 ஆம் தேதி மங்களூரில் என்னை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். தற்போது என்னை ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணுடன் கார்த்திக் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்“ என்று கூறினார்.

கார்த்திக்கும், நடிகை மைத்திரியும் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களும் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கார்த்திக்குடன் திருமணம் நடந்ததற்கான ஆதாரம் எதையும் நடிகை மைத்திரி வெளியிடவில்லை.
இந்நிலையில் பெங்களூர் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் கார்த்திக் மீது நடிகை மைத்திரி புகார் கொடுத்தார்.அந்த புகாரில் “தெய்வத்தை சாட்சியாக வைத்து கார்த்திக் என்னை திருமணம் செய்தார். ஆனால் தற்போது அவர் வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், நடிகை மைத்திரியின் குற்றச்சாட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவும், அவரது மகன் கார்த்திக் கவுடாவும் மறுத்துள்ளனர்.

“நடிகை மைத்திரியுடன் இருப்பது நான் அல்ல. மைத்திரியுடன் நான் இருப்பது போன்ற புகைப்படங்கள் கிராபிக்ஸ் மூலம் இணைக்கப்பட்டு உள்ளது“ என்று கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார்.