1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 20 ஜனவரி 2015 (11:03 IST)

காதல் தகராறு: பீகாரில் 3 பேர் வீட்டுடன் எரித்துக் கொலை

பீகார் மாநிலம் அஜித்பூர் கிராமத்தில் நடந்த காதல் தகராறில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலில் 3 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர்.
 
பீகாரில் உள்ள முசாபர்பூரில் அஜித்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பர்தெண்டு குமார் என்ற வாலிபருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விக்கி என்பவருக்கும் இடையே ஒரு பெண்ணைக் காதலிப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.
 
இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி பர்தெண்டு குமார், விக்கியின் வீட்டின் அருகே பிணமாகக் மீட்கப்பட்டார். அதைத் தொடர்ந்து  விக்கியும் அவரது தந்தையும், பர்தெண்டு குமாரை கடத்தி சென்று கொலை செய்ததாக உறவினர்கள் குற்றஞ் சாற்றினர்.
 
இதைத் தொடர்ந்து, பர்தெண்டு குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் விக்கியின் வீட்டை சில தினங்களுக்கு முன்னர் முற்றுகையிட்டு விக்கி வீடு உள்ளிட்ட அவரது சமூகத்தை சேர்ந்த 9 பேரின் வீட்டிற்கு தீ வைத்தனர். இதில் 3 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
 
அவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில், இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
பர்தெண்டு குமார் கொலை தொடர்பாக விக்கியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் வீடுகளுக்கு தீ வைத்து 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.