கொல்கத்தாவின் பாலம் இடிந்து விழுந்த விபத்து : பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
கொல்கத்தாவின் கணேஷ் டாக்கீஸ் பகுதியில், கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பாலம் நேற்று இடிந்து விழுந்ததில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்த மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் கனேஷ் டால்கீஸ் பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அந்த பாலம் திடீரென நேற்று இடிந்து விழுந்தது.
இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் இடிபாடுகளை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதலில், அந்த விபத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது அந்த எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மேலும், 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக, இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இடிந்து விழுந்த பாலத்தின் இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.