1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2017 (15:02 IST)

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது பாதிரியார்!

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 65 வயது பாதிரியார்!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் 65 வயதான கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
திருவனந்தபுரத்தை சேர்ந்த தேவராஜ் என்ற 65 வயதான பாதிரியார் கந்தந்திட்டா பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த ஒரு வருடமாக பாதிரியாராக பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் அங்குள்ள சிறுவர்களுக்கு பைபிள் குறித்து போதித்து, நல்லொழுக்கங்கள் குறித்து போதனை வழங்கிவந்துள்ளார்.
 
அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் பைபிள் கற்று வந்துள்ளார். வழக்கம் போல அந்த சிறுமியை பைபிள் கற்றுக்கொள்ள அவரது தந்தை தேவாலயத்தில் வந்து விட்டு சென்றுள்ளார். குறிப்பிட்ட நேரம் கழித்து பைபிள் வகுப்பு முடிந்திருக்கும் என கருதிய அந்த சிறுமியின் தந்தை மீண்டும் தனது மகளை அழைக்க தேவாலயத்துக்கு சென்றார்.
 
அப்போது பாதிரியார் தேவராஜ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டு இருப்பதை அந்த தந்தை நேரில் கண்டு அதிர்ந்துவிட்டார். இதனையடுத்து அவர் உடனடியாக காவல்துறையினருக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்தார்.
 
பின்னர் அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் தேவராஜை கைது செய்தனர். குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.