1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 14 மார்ச் 2020 (16:29 IST)

கொரோனா பீதி: அலுவலகத்தை காலி செய்த இன்போசிஸ்!

இந்தியா முழுவதும் கொரோனா பீதி அதிகரித்துள்ள சூழலில் பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸுக்கு உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் ஒருவர் கொரோனாவுக்கு பலியானதை தொடர்ந்து கர்நாடகாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்கு தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடக மாநிலத்தில் செயல்படும் ஐடி நிறுவனங்களுக்கு ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிய அரசு பரிந்துரைத்தது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவன ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அந்த நிறுவனம் தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரிய உத்தரவிட்டுள்ளதுடன், வளாகத்தையும் மூடியுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா தீவிரமாவதை கட்டுப்படுத்த மேலும் பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணி புரிய உத்தரவிட இருப்பதாக கூறப்படுகிறது.