வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 17 பிப்ரவரி 2019 (15:32 IST)

பதிலடிக்கு இந்தியா தயார் – போர் விமானங்கள் ஒத்திகை !

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் இந்திய போர்விமானங்கள் ஒத்திகை நேற்று நடைபெற்றுள்ளது.

காஷ்மீரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பயங்கரவாதிகளால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 45 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புப் பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி அதில் அகமது 350 கிலோ எடைக் கொண்ட வெடிப்பொருட்களோடு அதிகாலை நேரத்தில் இந்திய வீரர்களின் வாகனத்தில் மோதி இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

இதையடுத்து தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானை இந்திய நட்பு வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பதிலடிக் கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாக பிரதமர் மோடித் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையருகே நேற்று இந்திய விமானப் படையை சேர்ந்த 81 போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. இந்திய விமானப் படையின் முக்கிய விமானங்களான மிராஜ் 2000, எம்.ஐ.ஜி 29, ஜாகுவார், சு30 ஆகியவை இந்த ஒத்திகையில் பங்கேற்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் பொக்ரான் பகுதியில் ‘வாயு சக்தி’ என்ற பெயரில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது.

இந்தியா வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற முடிவில் இருக்கையில் பாகிஸ்தானும் எதிர்த்தாக்குதலுக்குத் தயாராக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.