ஓரினச் சேர்க்கை குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் தெரிவித்த கருத்தால் சர்ச்சை
ஓரினச் சேர்க்கை சமூகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடிய செயல் என்றும் ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கக் கூடாது என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா கூறிய கருத்தால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் தத்தாத்ரேயா ஹொஸாபேல், ஓரினச் சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக கருதத் தேவையில்லை என்றும் பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வரையில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாக கருத வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். .
மேலும், ஓரினச் சேர்க்கை சமூகத்திற்கு பாதகத்தை ஏற்படுத்தும் செயல் என்பதால், ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
ஓரினச் சேர்க்கையை குற்றமாகக் கருதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க சட்டத்தில் தற்போது இடமுள்ளது என்பதை அவர் சுட்டுக்காட்டினார்
ஓரினச் சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக கருதக் கூடாது என அறிவிக்கக் கோரி, பல்வேறு அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.