வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (13:15 IST)

ரேஷன் மண்ணெண்ணெய் விலை உயர்வு ; அடுத்து மானியம் ரத்து?

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயின் விலையை உயர்த்தவும், படிப்படியாக மத்திய அரசு அளிக்கும் மானியத்தை ரத்து செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
பொதுமக்கள் சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டருக்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு சமீபத்தில் முடிவெடுத்தது. மேலும், மாதம்  லட்சம் ருபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனவும் தகவல் வெளியானது. இது நாடெங்கும் வாழும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
ஆனால், எதிர்கட்சிகளின் எதிர்ப்பையடுத்து,  சமையல் சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராளுமன்றத்தில் உறுதி அளித்தார்.
 
இந்நிலையில் தற்போது பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும், மண்ணெண்ணெய் மீது மத்திய அரசின் பார்வை திரும்பியிருக்கிறது. அதாவது, தற்போது வெளி மார்க்கெட்டில் லிட்டர் ரூ.50 வரை விற்கப்படும் மண்ணெண்ணெய்,  ரேஷன் கடைகளில் ரூ.13.60 க்கு கொடுக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு மானியம் அளித்து வருகிறது. இந்த மானியத்தை படிப்படியாக குறைக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 
இதையடுத்து, இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், மானிய மண்ணெண்ணெய் விலையை படிப்படியாக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. பொதுமக்களை பாதிக்காத வகையில் 25 பைசா வீதம் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. 
 
மானியம்  முழுவதும் ரத்து ஆகும் வரையில் விலை உயர்வை அமுல்படுத்திவிட்டு, அதன்பின்  மானியத்தை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே பல அறிவிப்புகள் மூலம் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் மத்திய அரசு,மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.