செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 16 டிசம்பர் 2017 (12:24 IST)

முன்னாள் முதல்வருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா குற்றவாளி என்றும் அவருக்கான தண்டனைகள் டிசம்பர் 16ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்றுமுன்னர் அவருக்கான தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதம் விதித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மதுகோடா உள்பட 4 பேருக்கு 2 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா தனது பதவிக்காலத்தில் தனது செல்வாக்கால் மாநிலத்தின் பல நிலக்கரிச் சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாகஒதுக்கீடு செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை வழக்காக எடுத்த சிபிஐ, மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா, ஜார்க்கண்ட் முன்னாள் தலைமைச் செயலர் ஏ.கே. பாசு, நிலக்கரித்துறைச் செயலர் ஹரிஷ் சந்திரா உள்ளிட்ட 15 பேர்மீது வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.