வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 1 ஜூலை 2017 (09:14 IST)

தாய் மரணம் : போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க வந்த 5 வயது சிறுமி

தனது தாயின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, ஐந்து வயது சிறுமி போலீசாருக்கு லஞ்சம் கொடுக்க தனது உண்டியலுடன் வந்த விவகாரம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
உத்தரபிரதேசத்தில் மீரட் நகரில் தனது தாத்தாவுடன் வசித்து வருகிறாள் 5 வயது சிறுமியான மாநவி. 
 
மாநவின் தாய் சீமா, சஞ்சீவ் கௌசிக் என்பவரை 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். அவர்களுக்கு பிறந்த ஒரே பெண் குழந்தைதான் மாநவி.
 
அந்நிலையில், சீமாவை, சஞ்சீவ் வரதட்சணை கொடுமை செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சீமா, 4 வருடங்களுக்கு முன்பே கணவனை பிரிந்து தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். மேலும், தனது கணவனுக்கு எதிராக நீதிமன்றத்தில் சீமா வழக்கும் தொடர்ந்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதைத் தொடர்ந்து மனமுடைந்த அவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.


 

 
இந்நிலையில்தான், தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தை எடுத்துக்கொண்டும், தனது தாத்தா மற்றும் மாமாவுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார் மாநவி. அங்கிருந்த போலீசாரிடம் தனது தாயை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்த பணத்தை வைத்துக்கொள்ளுங்கள் என கூறினார்.
 
சிறுமிடம் பேசிய ஐ.ஜி ராம்குமார் ‘எதற்காக பணம் கொண்டு வந்தாய்?” என கேட்டதற்கு, ‘பணம் இல்லையேல் எதுவும் நடக்காது’ என எல்லோரும் கூறினார்கள். அதனால்தான், எனது உண்டியலை எடுத்து வந்தேன் என கூறினாள். அதைத் தொடர்ந்து உண்டியல் பணத்தை நீ எடுத்து கொண்டு வீட்டிற்கு போ. உன் தாயின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என கூறி அனுப்பி வைத்தார். 
 
5 வயது சிறுமி போலீசாரிடம் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் எற்படுத்தியுள்ளது.