1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2017 (15:31 IST)

ஆம்புலன்சு தர மறுப்பு ; மகளின் சடலைத்தை 15 கி.மீ தூக்கி சென்ற தந்தை - அதிர்ச்சி வீடியோ

மருத்துவமனையில் மரணம் அடைந்த தன் மகளின் சடலத்தை எடுத்து செல்ல, நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால், தன் தோளிலேயே சுமந்து 15 கி.மீ தூரம் வரை சென்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஒடிசா மாநிலம், காளஹண்டி மாவட்டத்தில், மிகவும் பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த டானா மஜ்ஹய் என்பவரின், அங்குள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் மரணமடைந்த போது, ஆம்புலன்சு வழங்க நிர்வாகம் மறுத்தது. எனவே மஜ்ஹய், தன் மனைவியின் சடலத்தை தன்னுடையே தோளிலேயே சில கி.மீ தூரம் தூக்கி சென்றார். அந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தற்போது அதேபோல் மீண்டும் ஒரு சம்பவம் ஒடிசாவில் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவின் கிழக்குப் பதியான அங்குல் மாவட்டத்தில் உள்ள பிசாமூண்டி என்ற கிராமத்தில் வசிக்கும் தகீபர் என்பவரின் 5 வயது மகள்  சுமி.  சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள பாலஹாடா கம்யூனிட்டி ஹெல்த் செண்டரில் சேர்த்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி சுமி இறந்து விட்டாள். எனவே, தன்னுடைய மகளின் உடலை தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்ல, மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது. 
 
எனவே தகீபர், சுமியின் உடலை தனது தோளில் சுமந்து கொண்டு 15 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தே சென்றுள்ளார். இந்த தகவல் அந்த மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு செல்லவே, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் துணை ஆட்சியர், தகீபர் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த காவலாளியும், மருத்துவமனை மேலாளரும் தனக்கு உதவி செய்ய மறுத்ததை கூறி தகீபர் கதறி அழுதுள்ளார். தனது மகள் இறந்த துக்கத்தை விட, அவளின் உடலை எடுத்து செல்ல ஆம்புலன்சு தர மறுத்தது, தனக்கு மிகுந்த மன வேதனையை தருவதாக அவர் கூறியுள்ளார்.
 
இதையடுத்து, அந்த மருத்துவமனையில் உள்ள காவலாளி மற்றும் இளநிலை மேலாளர் இருவரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பணியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இது போன்ற சம்பவங்கள் ஒடிசாவில் தொடர்ந்து நடைபெறுவது அந்த மாநில மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
 
இந்த சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. 
 


Courtesy - ANI