வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 5 மார்ச் 2015 (10:55 IST)

நிர்பயா குறித்த 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை ஒளிபரப்பியது பி.பி.சி.

டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா குறித்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப, மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், இந்த ஆவணப்படத்தை பிரிட்டன் மற்றும் இதர நாடுகளில் பி.பி.சி. ஒளிபரப்பியது.
 
நிர்பயா என்ற புனைபெயரில் அழைக்கப்பட்ட, மருத்துவ மாணவி கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் கொடூரமாக கற்பழிக்கப்பட்டார்.
 
தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், கொடூரமாகத் தாக்கப்பட்டு சாலையோரம் வீசப்பட்டார். அவருடன் சென்ற நண்பரும் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்.
 
இதைத் தொடர்ந்து, அவருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் பரிதாபமான நிலையில் உயிரிழந்தார்.
 
இந்த கற்பழிப்பு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுள் ஒருவரான முகேஷ் சிங் என்பவனிடம் லெஸ்லி உட்வின் என்ற திரைப்பட தயாரிப்பாளர் இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்திற்காக பேட்டி கண்டார்.
 
உலக பெண்கள் தினமான மார்ச் 8 ஆம் தேதியன்று இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப பி.பி.சி. தொலைக்காட்சி திட்டமிட்டிருந்தது.
 
இந்நிலையில் இந்த ஆவணப்படம் எடுக்க அனுமதி வழங்கியது குறித்தும், குற்றவாளியின் பேட்டி குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில், ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் கே.சி. தியாகி நோட்டீஸ் அளித்தார்.
 
இதையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இது குறித்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிர்பயா கொலை குறித்த ஆவணப்படம் ஒளிபரப்ப தடை விதித்துள்ளதாகவும், குற்றவாளியிடம் பேட்டி காண அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
 
இந்தப் படத்திற்கு, இந்தியா தடை விதித்துள்ள போதும், இன்று அதிகாலை நிர்பயா குறித்த 'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை பி.பி.சி. ஒளிபரப்பியது. பிரிட்டன் மற்றும் இதர நாடுகளில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பானது. 
 
இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்கான விருப்பம் அதிகரித்ததால், முன் கூட்டியே ஒளிபரப்பியதாக பி.பி.சி. கூறியுள்ளது.
 
முன்னதாக, மத்திய அரசு முகேஷ் சிங்கின் பேட்டி உள்ளிட்டவற்றை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தது என்பதும், இந்த ஆவணப்பட்த்தை இந்தியாவில் ஒளிபரப்பத் தடை விதித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.