வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (12:41 IST)

இடியுடன் கூடிய கனமழை : 13 மாநிலங்களுக்கு எச்சரிக்கை

அடுத்த 48 மணி நேரத்தில் இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 
தற்போது கோடை காலம் என்பதால், நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதுவும், அக்னி வெயிலும் தொடங்கிவிட்டதால் வெளியே நடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலையில், கடந்த முன்பு சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதேபோல், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழையும், கடுமையான புழுதிப்புயலும் வீசியது.  இதில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிந்தனர். மேலும், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் பலத்த மழை பெய்தது.
 
இந்நிலையில், இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்தந்த மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
தமிழகத்தை பொறுத்தவரை வெப்பச்சலனம்  காரணமாக சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.