வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 21 நவம்பர் 2016 (17:22 IST)

மல்லையாவிற்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் - சிறப்பு நீதிமன்றம் அதிரடி

தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு பிடி வாரண்ட் பிறப்பித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

‘கிங் பிஷர்’ மதுபான ஆலை அதிபரான விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில ரூ. 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனை வாங்கி விட்டு, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார்.

அவருக்கு எதிரான கடன் மோசடி வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளி என்று பணமோசடி தடுப்பு நீதிமன்றமும் அண்மையில் அறிவித்தது.

இதனிடையே, பல்வேறு நிறுவனங்களுக்கு விஜய் மல்லையா அளித்திருந்த காசோலைகள், அவரது வங்கிக் கணக்குகளில் போதிய பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டன.

இந்நிலையில், மல்லையா குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில உறுதிப் பங்குகள், இது தொடர்பான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்து முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு முறைகேடு, மோசடி வழக்கு தொடர்பாக ரூ.1,411 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்தது. இந்நிலையில், தற்போது ரூ. 6 ஆயிரத்து 630 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  சிபிஐ தொடுத்துள்ள வழக்கில் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.