வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (08:53 IST)

தான்சானியா மாணவி நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் - பாஜக, காங்., தொழிலதிபர்களுக்கு தொடர்பு

தான்சானியா மாணவி நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் - பாஜக, காங்., தொழிலதிபர்களுக்கு தொடர்பு

பெங்களூரில் தான்சானியா மாணவி மீதான பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 11 பேரில் பெரும்பாலோர் பாஜக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்தான் என்று தெரியவந்துள்ளது.
 

 
இது குறித்து `பெங்களூரு மிரர்’ வெளியிட்டுள்ள செய்தியில், ”ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டதாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்களில் பெரும்பாலோர் பாஜக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவர். மேலும், அவர்கள் அனைவரும் தொழில் அதிபர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
 
தான்சானியா மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவானதன் அடிப்படையிலும் காவல் துறையினரின் தொடக்கநிலை விசாரணையை கொண்டும் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
கைது செய்யப்பட்டவர்களில் பானு பிரகாஷ், ஆர்.வெங்கடேஷ், டி.லோகேஷ், சலீம் பாஷா மற்றும் ரஹமதுல்லா ஆகியோர் 3 பெரிய கட்சிகளின் உள்ளூர் தலைவர்களாக உள்ளனர். இவர்களில் லோகேஷ் என்ற பங்காரி பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் உள்ளூர் பாஜக தலைவராவார்.
 
வெங்கடேஷ் மற்றும் பானு பிரகாஷ் ஆகியோர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ரஹமதுல்லா மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தீவிர உறுப்பினர் ஆவார். அதே போல இரண்டாம் முறை கைதானவர்களில் ராஜண்ணா பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பெங்களூரில் தான்சானியாவைச் சேர்ந்த மாணவியை பாஜகவினர் ஆடைகளைக் கிழித்து கொடூரமாக தாக்குதல் நடத்திய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.