1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (08:45 IST)

மாணவர்கள் ரயில் கட்டணம் செலுத்த தேவையில்லை – முதல்வர் அறிவிப்பு!

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள மாணவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பீகார் மாணவர்கள் ரயில் கட்டணம் செலுத்த தேவையில்லை என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. திடீரென வெளியான அறிவிப்பால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டு கட்ட ஊரடங்குகளாக பணிபுரியும் இடத்திலேயே சிக்கி கொண்டிருந்த ஊழியர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால் ரயில்களை பாயிண்ட் டூ பாயிண்டாக இயக்கவும், முன்பதிவு முறையை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் வெளிமாநிலங்களில் உள்ள பீகார் மாணவர்களின் கட்டண செலவை அரசே ஏற்கும் என பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் பீகார் வந்தது வட்டார தலைமையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும், 21 நாட்கள் கழித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும், உதவி தொகையாக ரூ.500 வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.