1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2018 (14:17 IST)

முதல்வர் இருக்கையில் பாலகிருஷ்ணா - ஆந்திராவில் சர்ச்சை

ஆந்திர நடிகர் பாலகிருஷ்ணா முதல்வர் சந்திரபாபு நாயுடு இருக்கையில் அமர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட விவகாரம் ஆந்திர மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரின் மைத்துனரும் நடிகருமான பாலகிருஷ்ணா இந்துபூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
 
இந்நிலையில், இந்துபூரில் வருகிற மார்ச் மாதம் நடைபெறவுள்ள லேபக்ஷி உற்சவ நிகழ்ச்சி தொடர்பாக விஜயவாடாவில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் பாலகிருஷ்ணா அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்த வேறு அறை இருந்தாலும், அவர் முதல்வர் அறையில், அதுவும் முதல்வர் இருக்கையில் அமர்ந்து அதிகாரிகளுன் ஆலோசனை செய்தார்.

 
இது அங்கிருந்த அதிகாரிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகப்பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளிநாடு சென்றுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்த விவகாரம் ஆந்திர அரசியல் கட்சியினருக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.