வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 2 பிப்ரவரி 2017 (17:19 IST)

தமிழக வழக்கறிஞரை மிரட்டிய விலங்கு நல வாரிய உறுப்பினர் - உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு

வழக்கு தொடர்ந்ததற்காக, உச்ச நீதிமன்றத்தின் வளாகத்திலேயே, விலங்கு நல வாரியத்தை சேர்ந்த வழக்கறிஞரால்,  தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்த்து விலங்கு நல வாரிய அமைப்பின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த கடந்த மாதம் 31ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அவசர சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் கூறிவிட்டனர்.
 
இந்நிலையில், தமிழகத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, தன்னை விலங்கு நல வாரியத்தின் சார்பாக வாதாடிய அஞ்சலி சர்மா மிரட்டியதாக புகார் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அவர் நீதிபதிகளிடம் கூறிய புகாரில் “கடந்த செவ்வாய்கிழமை ஜல்லிக்கட்டு வழக்கு மீதான விசாரணை முடிந்த, பின், விலங்கு நல வாரிய உறுப்பினரும், வழக்கறிஞருமான அஞ்சலி சர்மா, அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கக்கோரி நான் மனு தாக்கல் செய்ததற்காக என்னை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினார். அவருடன், மத்திய மந்திரி மேனகா காந்தியின் ஆலோசகர் கவுரி முலேக்கி மற்றும் அவருடன் இருந்தவர்களும் என்னை மிரட்டினார்கள்.
 
அதிக பாதுகாப்புள்ள உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே, எனக்கு மிரட்டல் விடுத்தது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அனவே அஞ்சலி சர்மா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் நீதிபதிகளிடம் புகார் அளித்தர்.
 
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சங்கத்திடம் புகார் அளிக்குமாறு பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அட்டார்னி ஜெனரல், விலங்குகள் நல வாரிய தலைவர் ஆகியோருக்கு ஜி.எஸ். மணி புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.