1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 28 மே 2015 (06:11 IST)

தேசிய தலைவராக மகுடம் சூட்டப்பட்ட சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சியின், தேசிய தலைவராக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார்.
 
தெலுங்கு தேசம் கட்சியின் 24 ஆவது ஆண்டு மாநாடு, ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் இருந்து  பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வாகனங்கள் மூலம் குவிந்தனர்.
 
மாநாட்டுக்காக, ஐதராபாத்தின் புறநகரான, கண்டிப்பேட்டை என்ற இடத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. முதல் நாள் மாநாடு நேற்று காலை கோலாகலமாக தொடங்கியது.
 
மாநாட்டுக்கு வந்த ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடுவுக்கு, தெலுங்கானா முறைப்படி போனூல் நடனமும், ஆந்திரா முறைப்படி பதுகம்மா நடனமும், ராயலசீமா முறைப்படி கோலாட்டம் நடனமும் ஆடி வரவேற்பு கொடுத்து அசத்தினர். 
 
பின்பு, மாநாட்டு தொடங்கியதும், தெலுங்கு தேசம் கட்சி தற்போது முதல், தேசிய கட்சியாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டார். இதற்கான முறையான அறிவிப்பை, துணை முதல்வர் சினராஜப்பா அறிவித்தார்.
 
ஏற்கெனவே, ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி வலுவாக உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, இமாசல பிரதேசம், அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட பல மாநிலங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எனவே,  தெலுங்கு தேசம் கட்சியை தேசிய கட்சியாக அறிவிக்கப்பட்டது.
 
இதைத் தொடர்ந்து,  தெலுங்கு தேசம் கட்சி மாநாடு உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மாநாட்டு நிறைவு நாளில் தேசநலன் கருதி பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
 
மாநாட்டு பணிகளை சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ்  கவனித்து வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.