1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2015 (16:44 IST)

அனைவராலும் விரும்பப்படும் எளிமையான மனிதர் கலாம்: அமிதாப் பச்சன் புகழாரம்!

முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் திடீர் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தியுள்ள இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அனைவராலும் விரும்பப்படும் எளிமையான மனிதர் அப்துல் கலாம் என்று கூறியுள்ளார்.
 

 
அவர் தனது பிளாக்கில், நமது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் திடீரென மரணம் அடைந்துள்ளார். ஷில்லாங்கில் உள்ள ஐஐஎம் கல்லூரியில் சொற்பொழிவு ஒன்றை வழங்கி கொண்டிருந்த அவர் சரிந்து விட்டார். தலைசிறந்த நபருக்கு ஏற்பட்ட திடீர் முடிவு என தெரிவித்துள்ளார்.  72 வயது கொண்ட அமிதாப் பச்சன் கூறும்போது, அறிவியல், ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆய்வு திட்டங்களால் இந்தியாவை உலக வரைபடத்தில் இடம் பெற செய்தவர் கலாம் என கூறியுள்ளார்.
 
ஓர் எளிமையான மனிதர், குழந்தைத்தன தோற்றம் கொண்டவர், இயல்பாக பழகக் கூடியவர், எல்லோரின் நலனிலும் அக்கறை கொண்டவர் மற்றும் அனைவராலும் விரும்பப்படுபவர். அவருடன் தொடர்பு கொண்டதில் எனது ஒரே சாதனை என்றால், இந்தியாவின் அடுத்த குடியரசு தலைவர் என அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு தொலைபேசியில் அவருடன் பேசினேன். அவரின் மறைவின் மூலம் இந்தியா வருத்தமடைந்துள்ளது என அமிதாப் பச்சன் எழுதியுள்ளார்.