செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2019 (12:32 IST)

திருடர்களை விரட்டிய தமிழக தம்பதியருக்கு இந்தி சூப்பர் ஸ்டார் பாராட்டு !

நெல்லையில் திருடர்களுடன் துணிந்து போராடி அடித்து விரட்டிய முதியர்வர்களை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் பாராட்டியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கடையம் என்ற பகுதியில் உள்ள கல்யாணிபுரத்தில் வசித்து வருபவர் சண்முகவேல் (70).  இவரது மனைவி செந்தாமரை (65). இவர்களின் பிள்ளைகள் வெளியூரில் இருக்கின்றனர்.
 
இந்நிலையில் ஞாயிறு அன்று இரவு வேளையில் இவர்கள் வீட்டில் நுழைந்த இரு திருடர்கள், வீட்டு திண்ணையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த முதியவரின் கழுத்தை துண்டால் இறுக்கினர். அப்போது அவர் சப்தம் எழுப்பவே... வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த அவர் மனைவி  கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டினார்.  
 
ஆனால் திருடர்கள் கையில் அருவாளுடன் வெட்ட வரவே, வீட்டில் இருந்த சேரை எடுத்து அவர் மீது வீசினார். அப்போது கீழே சரிந்து வி்ழுந்த முதியவரும் எழுந்து வந்து சேரை எடுத்து சிறுதும் பயப்படாமல் திருடர்களை அடித்து விரட்டினார். அந்த திருடர்கள் இரு முதியவர்களின் அடி தாங்க முடியாமல் ஓடிவிட்டனர். இந்த காட்சிகள்  வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது நேற்று முதல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 
இந்த சம்பவம் பற்றி அறிந்த  நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டெண்ட், உள்ளிட்ட பலர் முதிய தம்பதியினரின் இந்த தீரமிக்க செயலை நேரில் சென்று பாராட்டினர். மேலும் இந்த சம்பவம் பற்றி அறிந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த தம்பதியினரை ப்ராவோ (சிறந்த  செயல்) என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.