வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (12:12 IST)

அ.தி.மு.க. எம்.பி. தாக்கியதாக ரயில்வே கேட்கீப்பர்கள் போராட்டம்!

திண்டுக்கல் அருகே ரயில்வே கேட் கீப்பருக்கும், எம்.பிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறி, கேட் கீப்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தென் மாவட்ட ரயில்கள் தாமதமாகின.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அழகம்பட்டியில் உள்ள ரயில்வே கேட்டில் மணிமாறன் என்பவர் பணியில் இருந்தார். நேற்று மாலை திண்டுக்கல் எம்.பி உதயகுமார் காரில் வந்தபோது திருச்செந்தூர்-பாலக்காடு ரயிலுக்காக கேட் மூடப்பட்டிருந்ததால், ரயில்வே ஊழியர் மணிமாறனிடம் கேட்டை உடனே திறக்குமாறு உதயகுமார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் உதயகுமார் எம்.பி., தம்மை தாக்கியதாக மணிமாறன் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் உதயகுமார் மிரட்டியதால் ரயில் வரும் நேரத்தில் கேட்டை திறந்து அவரது காரை செல்ல அனுமதித்ததாகவும், மணிமாறன் தெரிவித்துள்ளார்.
 
இதனால் திண்டுக்கல் மதுரை வழியாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ஒரு மணி நேரமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு பின் இயக்கப்பட்டன.  இந்த நிலையில், கேட் கீப்பர் மணிமாறன் தன்னை தாக்கியதாக கூறி, எம்பி உதயகுமார்,  அம்மையநாயக்கனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மணிமாறன் தாக்கியதில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, அவர் மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இச்சம்பவத்தை தொடர்ந்து, அழகம்பட்டி, கொடைரோடு, அம்பாத்துரை, காந்திகிராமம், வெள்ளோடு உட்பட ஐந்து ரயில்வே கேட்கீப்பர்கள் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
 
இதனால், மதுரை-திண்டுக்கல் மார்க்கத்திலும், திண்டுக்கல் - மதுரை மார்க்கத்திலும், சென்னை உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ், துரந்தோ எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கொடைரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. பின்னர், ரயில் ஓட்டுநர்களே, கேட்டுகளை மூடிவிட்டு, ரயில்களை இயக்கிச் சென்றனர். இதனால், மூன்று ரயில்கள் ஒன்றரை மணி நேரம் தாமதமாக திண்டுக்கல் வந்தடைந்தன. பயணிகள் கடும் அவதிக்கு ஆளகினர்.
 
சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கேட் கீப்பர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கி கொண்டனர்.