1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2016 (09:23 IST)

அமீர்கானின் விளம்பர தூதர் பதவி திடீர் பறிப்பு?

இந்திய சுற்றுலாத் துறையின் ’மகத்தான இந்தியா’ (incredible india) திட்டத்தின் தூதர் பதவியில் இருந்து அமீர்கான் விடுவிக்கப்பட்டுள்ளதாக எழுந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
 

 
இந்திய சுற்றுலாத் துறையை பிரபலப்படுத்தும் வகையில், மத்திய அரசு ’மகத்தான இந்தியா’ (incredible india) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இதற்கிடையில், கடந்த ஆண்டு ஆளும் மத்திய அரசு சகிப்பின்மை காரணமாக கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மாட்டுக்கறி வைத்திருந்ததன் பேரில், உத்திரப்பிரதேசத்தின் தாத்ரியில் முஸ்லீம் முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.
 
மும்பையில், பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் இசைக்கச்சேரி நடத்த இருந்ததற்கு சிவ சேனா எதிர்ப்பு தெரிவித்தது. எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டனர். நடிகர் க்ரிஷ் கர்நாட்டிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தேறியது.
 
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அமீர் கான் பேசும்போது, "இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாதுகாப்பு இல்லாத அசாதாரண நிலை நிலவுகிறது. பாதுகாப்பில்லாத சூழலை மக்கள் அவ்வப்போது உணர்ந்து வருகின்றனர்.
 
சில நாள்கள் முன்பு என் மனைவி கிரண் என்னிடம், நாம் வேறு நாட்டிற்கு சென்று விடுவோமா, குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று கூறினார். கிரண் பயப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை" என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில், `உன்னதமான இந்தியா’ (incredible india) என்ற சுற்றுலாத் துறையின் தூதர் பொறுப்பில் இருந்து பாலிவுட் நடிகர் அமீர்கான் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இது குறித்து மத்திய சுற்றுலா அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், ”சுற்றுலா அமைச்சகம், நடிகர் அமீர் கானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை. ஆனால், அவருடன் திரைப்படம் தயாரிக்க மட்டுமே அமைச்சகம் உறுதியளித்தது. அந்த படம் முடிவடைந்துவிட்டது. அதற்கா 2.96 இலட்ச ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டது” என்று கூறியுள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், “அமைச்சகம் முறையான வழிமுறையின் மூலம், இறுதியாக ஒருவரை நியமிக்கும். இந்த பரிந்துரை சுற்றுலா வாரியத்தின் முன் தாக்கல் செய்யப்படும். சுற்றுலா வாரியம் அமீர் கானை நியமிப்பதா? அல்லது வேறு ஒருவரை நியமிப்பதா என முடிவெடுக்கும்” என்று கூறியுள்ளார்.
 
இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியுள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, “அமீர்கானை `உன்னதமான இந்தியா’ (incredible india) தூதரில் இருந்து நீக்கியது மத்திய மோடி அரசின் சிறுபிள்ளைத்தனமான மனபோக்கையும், குறுகிய அணுகுமுறையையும், சட்டாம்பிள்ளைத்தனத்தையும் காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
 
முன்னதாக சங்-பரிவாரக் கூட்டம் அவரை ‘மகத்தான இந்தியா’ திட்டத்தின் தூதர் பதவியில் இருந்து அமீர் கானை நீக்க வேண்டும் என்று கூக்குரல் எழுப்பி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.