ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற சென்னையைச் சேர்ந்த இளைஞர் கைது
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சிரியா- ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் அதனை இஸ்லாமிய நாடாக அறிவித்தது. இந்த தீவிரவாத இயக்கம் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஐ.எஸ் தீவிரவாத முகாம்கள் மீது விமான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனை எதிர்த்து ஐ.எஸ். அமைப்பினர் பாரீஸில் கடும் தாக்குதலை நடத்தினர். இந்த சம்பவம் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில். ஐ.எஸ். அமைப்பினர் அடுத்து இந்தியாவில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கைகள் எழுந்துள்ள. ஐ.எஸ். அமைப்பினர் மீது உள்ள மோகத்தால் உலகின் பல நாடுகளிலிருந்தும் இளைஞர்கள் அந்த அமைப்பில் சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த முகம்மது நசீர்(23) என்ற வாலிபர் ஐ.எஸ். இயக்கத்தில் சேர முயன்றது தெரியவந்துள்ளது. சென்னையில் கம்ப்யூட்டர் படிப்பு முடித்துள்ள அவர் துபாயில் வேலை செய்துவந்தார். அப்போது மேட் முல்லா என்பவர் நசீரை இயக்கத்தில் சேருமாறும், சிரியாவில் நடக்கும் போரில் பங்கேற்க வருமாறும் கூறியுள்ளார். இதனை ஏற்ற நசீரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிரியா செல்ல தயாரான முகம்மது நசீர் கடந்த மே மாதம் சென்னை வந்து உறவினர்களை பார்த்து சென்றார். பின்னர் அவர் சூடானுக்கு சென்றார். அவர் போலி பாஸ்போர்ட்டில் வந்திருப்பதை சூடான் அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து முகம்மது நசீரை சூடான் அரசு நேற்று இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.
அதுமட்டுமின்றி இது குறித்த தகவலையும் மத்திய அரசுக்கு சூடான் நாடு தெரிவித்தது. இதையடுத்து நேற்று டெல்லி விமான நிலையத்தில் முகம்மது நசீரை தேசிய விசாரணை குழுவினர் கைது செய்தனர். பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.