வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 28 ஜனவரி 2015 (13:27 IST)

“மகாபாரதம்” - 100 எபிசோடுகளை கடந்த இதிகாசத் தொடர்

மகாபாரதம் உலகில் எழுதப்பட்ட முதல் சுயசரிதை, வியாசர் எழுதிய இந்த சுயசரிதை ஒரு இந்திய இதிகாசம், எப்படி வாழவேண்டும் என்பது ராமாயணம், எப்படி வாழக்கூடாது என்பது மகாபாரதம்.
 
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் ஓரு இதிகாசத் தொடர் முதன் முறையாக சன் தொலைக்காட்சியில் 100 எபிசோடுகளை கடந்து மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதை தயாரிக்கும் சினிவிஸ்டாஸ் நிறுவனம் இதில் பெருமிதம் கொள்கிறது.
 

 
முற்றிலும் தமிழிலேயே தமிழ் நடிகர்கள், தமிழ் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு உருவான இந்த மகாபாரதத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் 100க்கும் மேற்பட்டோர் O.A.K சுந்தர், பூவிலங்கு மோகன், சாக்க்ஷி சிவா, மனோகர், போஸ் வெங்கட், இளவரசன், பரத் கல்யாண், டைரக்டர் ராஜா, K.S.G வேங்கடேஷ், ராமசந்திரன், வெற்றிவேலன், அருண், சத்தியா, கிருஷ்ணகுமார், கோகுல், கார்த்திக், கண்ணன், கணேஷ்ராவ், ரமேஷ் பண்டித், ரவிபட், பிரவின் பட், வல்லப் சூரி, செலுவராஜ், லம்போ நாகேஷ், உடன் தேவிப்பிரியா, நீலிமா ராணி, துர்கா, ஷர்மலி, ஜீவிதா, கிருத்திகா, அர்ச்சனா அனந்தவேலு, ஹம்சா, நிஷா, மற்றும், 400க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இதுவரை நடித்துள்ளனர். இன்னமும் இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.
 
பெங்களூரில் ரூபாய் 1 கோடி செலவில் அமைக்கபட்ட அரண்மனை அரங்குகள், ப்ளூமேட் அரங்கம், தவிர நந்தி கிராமம், மாஹடி, ராம் நகர், ராக்கோட்டூலு, யசர்கட்டா, டீ கே நீர்வீழ்ச்சி, மஞ்சின் பெல்லா, பூத் பங்களா, பூமிகா, மற்றும் புட்டன்னா கனகல், ஸ்டுடியோ என பெங்களூரைச்சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
 
நீங்கள் அறிந்த கதையில், நீங்கள் கேள்விபடாத, மற்றும் நீங்கள் அறிந்துக்கோள்ளவேண்டிய பல விவரங்களை தேர்ந்தெடுத்து வழங்குவதன் மூலம் இத்தொடர் ரசிகர்களிடையே தனிச்சிறப்பை பெற்றுள்ளது.
 
சத்யவதியின் அந்திமகாலம், பீஷ்மரைக் கொல்ல பிறந்த சிகண்டிக்கும், தன்னைக் கொல்ல பிறந்த திருஷ்டத்துமனுக்கும் துரோணரே பயிற்சி அளித்தது, துரியோதனின் பிறப்பின் ரசசியம், அவன் தற்கொலை முயற்சி, பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய சிகண்டியின் நிகழ்வுகள் இன்றளவும் ரசிகர்களால் பாராட்டு பெற்றவை.
 

 
இனி பீஷ்மர், துரோணர், கர்ணன், அபிமன்யூ மரணத்தில் புதைந்துள்ள ரசசியங்கள், அவிழ்கப்படாத முடிச்சுக்கள், கிருஷ்ணர் – சகுனி இருவரின் மறைமுக ராஜதந்திர யுத்தம், கர்ணனின் மனைவிகள், பிள்ளைகள் இவைகளும் இடம் பெற உள்ளதாகவும், வரப்போகும் குருஷேத்ர யுத்தம் மட்டும் 1 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளதாகவும் தயாரிப்பாளர் சுனில் மேத்தா தெரிவித்தார்.
 

 
ரசிகர்களுக்கு பல நல்ல விஷயங்களை வழங்க வேண்டும் என்பதற்காகவே. மகாபாரதம் சம்பந்தமாக தமிழில் வந்த நூல்களில் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, இந்தி, குஜராத்தி, பெங்காலி, ராஜஸ்தானி, இந்தோனேஷியா போன்ற மொழிகளில் வெளிவந்த நூல்களிலிருந்தும், மராத்திய கையெழுத்து பிரதிகள், குஜராத்தின் கிராமபுற கூத்து, தஞ்சாவூர் பொய்கால் குதிரை, நடன கதைகள், மற்றும் கிபி 100ல் எழுதபட்ட, “பஞ்சராத்ரா” “தூது வாக்யம்” போன்ற பாஸனின் நாடகங்கள், யட்ச கானம், ஜைன மகாபாரதம் முதலியவற்றிலிருந்தும் சுவையான விஷயங்களை எடுத்து பொருத்தமான இடங்களில் சேர்ப்பதன் மூலம், ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க உள்ளதாக இயக்குனர் சி.வி. சசிகுமார் தெரிவித்தார்.