1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (14:49 IST)

அடிமை அதிமுகவை விரட்டியது போல எஜமானர்களான பாஜகவையும் விரட்ட வேண்டும்..! அமைச்சர் உதயநிதி ஆவேசம்..!!

Udayanithi
பாஜகவுடன் நான்கு ஆண்டுகள் கூட்டணியில் இருந்து, தமிழகத்தின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி உரிமைகளை எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுத்து விட்டதாக அமைச்சர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
 
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை பகுதியில், ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து  அமைச்சர் உதயநிதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்கத் தவறிய மக்களும் பெருமைப்படும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பணிபுரிந்து வருகிறார் என்றார்.
 
பாஜகவுக்கு பயந்து நீட் தேர்வினை தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அனுமதித்து விட்டார் என்றும்  திமுக ஆட்சி அமைந்த பிறகு, நீட் தேர்வினை ரத்து செய்ய சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
திமுக செய்த திட்டங்களை பட்டியலிட்ட அவர்,  கடந்த 10 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பாஜக தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டினர். சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது மத்திய அரசு உதவி செய்யவில்லை என்றும் ஜிஎஸ்டி மூலம் வசூல் செய்யப்படும் தொகையை மத்திய அரசு முறையாக, சரிசமமாக, மாநிலத்துக்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.
 
தமிழகத்தில் இருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், 29 பைசா மட்டும் திரும்ப வருகிறது என்றும் தமிழகத்தில் இருந்து ஜிஎஸ்டி மூலம் மத்திய அரசு வழிப்பறிக் கொள்ளை அடித்து வருகிறது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
 
கடந்த 10 ஆண்டுகளாக, தமிழகத்துக்கு வராத பிரதமர் மோடி, தேர்தலுக்காக தற்போது அடிக்கடி வருகிறார் என்று அவர் விமர்சித்தார். பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்று இப்போது நாடகம் போடுகின்றனர் என்றும் தேர்தலுக்கு பிறகு, இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார். 


கடந்த தேர்தலில் அடிமை அதிமுகவை விரட்டி அடித்தது போல, இந்த முறை அதிமுக எஜமானர்களான பாஜகவையும் விரட்டி அடிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஆவேசமாக கூறினார்.