வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 17 ஏப்ரல் 2019 (15:25 IST)

மதுரையில் மின்சாரத்தை நிறுத்தி ஓட்டுக்குப் பணம் – திமுகவினர் குற்றச்சாட்டு !

மதுரையில் நேற்றிரவு மின்சாரத்தை நிறுத்தி அதிமுகவினர் பணம் கொடுத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தலும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க இருக்கிறது. இதற்காகப் பிரச்சாரம் நேற்று மாலையோடு முடிவடைந்தது. இதையடுத்து வாக்குக்குப் பணம் கொடுக்க கட்சிகள் ஆரம்பித்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு மக்களுக்குப் பணம் கொடுப்பதற்கு கட்சிகள் நூதனமான வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர்.

மதுரையில் நேற்றிரவுப் பிரச்சாரம் முடிந்ததும் மின்சார நிறுத்தம் செய்து மக்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்துள்ளனர். இதை அந்த தொகுதியின் திமுக எம்.எல்.ஏ.வான பிடிஆர் பழனிவேல்ராஜன் சமூகவலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.இதுகுறித்து தனது டிவிட்டரில் ‘மதுரையில் இன்றிரவு தொடர் மின்சார நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அதிமுக, வாக்காளர்களுக்குப் பணம் தர மின்சார வாரியம் உதவி செய்துள்ளது. எப்படியும் பிழைப்பு நடத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் எந்த நிலைக்கும் தாழ்ந்து செல்வார்கள். பாசிசத்தையும் அதன் கொத்தடிமைகளையும் மக்கள் திரும்ப அனுப்ப முடியாமல் தடுப்பார்கள். ஆனால் அன்னை மீனாட்சியின் அருளால் அவர்கள் வீழ்வார்கள்’ என கூறியுள்ளார்.

வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறி வேலூர் தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ள நிலையில் இதுமாதிரியான குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.